Thursday, June 16, 2005

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா..?

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா என்பதில் பல தம்பதியருக்கும் சந்தேகம்.

கர்ப்ப காலத்தில் உறவு கொண்டால் பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம். கர்ப்ப காலத்தில் உறவு கொள்ள விரும்புவோர் கீழ்க் கண்ட விஷயங்களை நினைவில் கொள்வது நலம்.
மனைவி ஆரோக்கியமான உடல் நிலையில், கருப்பை தொடர்பான கோளாறுகள் ஏதுமின்றி, உறவு கொள்வதில் விருப்பமும் உள்ளவளாக இருந்தால், கடைசி மாதம் வரைகூட உறவு கொள்ளலாம்.

எட்டு மாதங்கள் வரை தாராளமாக உறவு கொள்ளும் தம்பதியர் அதற்குப் பிறகு அதை நிறுத்திவிட்டால் நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் ஒன்பதாவது மாதத்துக்குப் பிறகாவது அதைத் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலம் முழுவதும் உறவே இல்லாமல் இருந்தாலும் நல்லதுதான்.

பெரும்பாலும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மன உளைச்சல் மிக அதிகமாக இருக்கும். அந்நாட்களில் பெரும்பாலும் அவர்களுக்கு உறவில் வேட்கை இருக்காது. அப்படிப்பட்ட நிலையில் அவளைக் கட்டாயப் படுத்தி கணவன் உறவுக்கு சம்மதிக்க வைக்கக் கூடாது. அதனால் அந்தப் பெண் உடலளவில் மட்டுமின்றி, மனத்தளவிலும் பெரிதும் பாதிக்கப்படுவாள். குழந்தையின் மன வளர்ச்சியிலும் பாதிப்பு இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் உறவு கொள்ளலாமா என்பதை மாதிரியே பிரசவ காலத்துக்குப் பிறகு எத்தனை நாட்கள் கழித்து உறவு கொள்வது என்பதிலும் பலருக்கும் சந்தேகம்.

குழந்தை பிறந்த ஒரு சில நாட்களிலேயே உறவு கொள்வதை எந்த தம்பதியரும் அனுமதிக்கக் கூடாது.

பிரசவம் எப்படி அமைந்தது என்பது முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இயல்பான பிரசவம் என்றால் மனைவியின் உடல் சீக்கிரமே சகஜ நிலையை அடையும். பிரசவத்துக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து உறவில் படலாம்.

சிக்கலான பிரசவமாகவோ, சிசேரியனாகவோ இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே அவர் குறிப்பிடும் நாட்களுக்குப் பிறகே தாம்பத்திய உறவு கொள்ள வேண்டும்.

குழந்தைப் பிறப்பால் பெண்ணின் உறுப்பில் காயங்கள் இருக்கும். அது ஆறி விட்டதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதோடு, கணவனுக்கு தொற்று நோய் ஏதும் இருக்கக் கூடாது.

கர்ப்ப காலத்திலும், அதற்குப் பிறகும் உடல் உறவு கொள்ளும் போது சுத்தம் என்பது மிக முக்கியம். ஒவ்வொரு முறை உறவுக்குப் பிறகும் பெண்ணுறுப்பை முறையாக சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

கருச்சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் உறவுக்கு முன்பு மருத்துவர் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம்.

By Dr.ஷர்மிளா

1 Comments:

At Thursday, May 21, 2009 9:58:00 PM, Blogger Manimegalai Kannan said...

Ungaludaya tipsukku Nanri.
Naan 5 maadha Garpini. Naan 10 Natkalukku oru murai dhan uravu vaithu kolgiren (en muzhu viruppathudan) aanal, enakku eppodhume andha idathil oru vidha arippu, namaichal irukiradhu enna seivatdhu?

 

Post a Comment

<< Home